Moondram Thiruvandhadhi — The Third Sacred Linked Verses
(Chapter 16)
மூன்றாம் திருவந்தாதி
Verse 1
சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள் காரார் கருமுகிலைக் காணப்புக்கு ஓராத் திருக்கண்டேன் எனவுரைத்த சீரான் கழலே உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து.
Verse 2
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு மருக்கனணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பா லின்று
Verse 3
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன், பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை மருக்கண்டு கொண்டேன் மனம்.
Verse 4
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச் செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன், வருநரகம் தீர்க்கும் மருந்து.
Verse 5
மருந்தும் பொருளும் அமுதமும் தானே, திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும் நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால், அன்றுலகம் தாயோன் அடி.
Verse 6
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன், படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம் ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே ஆராழி கொண்டாற் கழகு.
Verse 7
அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம், அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ, கங்கைநீர் கான்ற கழல்.
Verse 8
கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை, பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங் கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை, நண்ணற் கரியானை நாம்.
Verse 9
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று, நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய், கண்ணனையே காண்கநங் கண்.
Verse 10
கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில் கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன், திருமா மணிவண்ணன் தேசு.
Verse 11
தேசும் திறலும் திருவும் உருவமும், மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில் வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத, நலம்புரிந்து சென்றடையும் நன்கு.
Verse 12
நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும் பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப் பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார் நூற்கடலான் நுண்ணறிவி னான்.
Verse 13
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில், செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும் நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும் பைங்கோத வண்ணன் படி.
Verse 14
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே, மாகாய மாய்நின்ற மாற்கு.
Verse 15
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு, நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பணிந்து.
Verse 16
பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத, பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங் கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன் மனந்த னணைக்கிடக்கும் வந்து.
Verse 17
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும் அணிவிளக் காம், - எந்தை ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன், திருவல்லிக் கேணியான் சென்று.
Verse 18
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால், என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும் இறவாத எந்தை இணையடிக்கே யாளாய், மறவாது வாழ்த்துகவென் வாய்.
Verse 19
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி, அஞ்சா திருக்க அருள்.
Verse 20
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது, முந்தையராய் நிற்பார்க்கு முன்.
Verse 21
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே திருமாலே செங்க ணெடியானே, எங்கள் பெருமானே நீயிதனைப் பேசு.
Verse 22
பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ வக்கரனைக் கொன்றான் வடிவு.
Verse 23
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும் கடியார் மலர்தூவிக் காணும் - படியானை, செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே, மெய்ம்மையே காண விரும்பு.
Verse 24
விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார் சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும் புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே, மனம்துழாய் மாலாய் வரும்.
Verse 25
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும், நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும் சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும் தொடராழி நெஞ்சே தொழுது.
Verse 26
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம், முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து.
Verse 27
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம்கடவார் தண்டுழா யார்.
Verse 28
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார், காரே மலிந்த கருங் கடலை,- நேரே கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து.
Verse 29
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப் பேய்ச்சிபா லுண்ட பிரான்.
Verse 30
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய், தெருளா மொழியானைச் சேர்ந்து.
Verse 31
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி யாய இவை.
Verse 32
இவையவன் கோயில் இரணியன தாகம், அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான் பாகத்தான் பாற்கடலு ளான்.
Verse 33
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், - பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், குருந்தொசித்த கோபா லகன்.
Verse 34
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம் மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம் அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.
Verse 35
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல், நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்.
Verse 36
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண் தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற் கழல்பாடி யாம்தொழுதும் கை.
Verse 37
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம், வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய படைபரவ பாழி பனி நீ ருலகம், அடியளந்த மாயன் அவற்கு.
Verse 38
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான், உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும் பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம், திகழும் திருமார்வன் தான்.
Verse 39
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும், தானே தவவுருவும் தாரகையும், - தானே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இறை.
Verse 40
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான், உள்ளத்தி னுள்ளே உளன்.
Verse 41
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும் உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய், விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான், மண்ணெடுங்கத் தானளந்த மன்.
Verse 42
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும், துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும் குடையாக ஆகாத்த கோ.
Verse 43
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி, மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி அரியுருவ மாகி இரணியன தாகம், தெரியுகிரால் கீண்டான் சினம்.
Verse 44
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து, புனமேய பூமி யதனை, - தனமாகப் பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார், ஓரகலத் துள்ள துலகு.
Verse 45
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ் அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே, பூரித்தென் நெஞ்சே புரி.
Verse 46
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித், திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள் மண்கோட்டுக் கொண்டான் மலை.
Verse 47
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட் டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான், பிண்டமாய் நின்ற பிரன்.
Verse 48
நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா, - அன்று துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள் நரகவாய் கீண்டாயும் நீ.
Verse 49
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய், நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய், தேவா சுரம்பொருதாய் செற்று?
Verse 50
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப் பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல் முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய், மூரிச்சுரியேறு சங்கினாய் சூழ்ந்து.
Verse 51
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால், தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான், அணிநீல வண்ணத் தவன்.
Verse 52
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர், இலங்கா புரமெரித்தான் எய்து.
Verse 53
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய், எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய் முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.
Verse 54
முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை, இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர் மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய், தண்ணலங்கல் மாலையான் தாள்.
Verse 55
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு, பெண்ணகலம் காதல் பெரிது.
Verse 56
பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு, கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால் பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன் நீணெடுங்கண் காட்டும் நிறம்.
Verse 57
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று, இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு.
Verse 58
பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி, மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து கருடன்மேல் கொண்ட கரியான் கழலே, தெருடன்மேல் கண்டாய் தெளி.
Verse 59
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள் மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.
Verse 60
வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய், தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும் திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள் பெருமான் அடிசேரப் பெற்று.
Verse 61
பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம், முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப் பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.
Verse 62
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம், கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை, இளங்குமரன் றன்விண் ணகர்.
Verse 63
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
Verse 64
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இசைந்து.
Verse 65
இசைந்த அரவமும் வெற்பும் கடலும், பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில், கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.
Verse 66
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து, மங்க இரணியன தாகத்தை,- பொங்கி அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே, கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.
Verse 67
காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த மதுகை டவரும் வயிறுருகி மாண்டார், அதுகே டவர்க்கிறுதி ஆங்கே.
Verse 68
ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய், ஓங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில் பகரு மதியென்றும் பார்த்து.
Verse 69
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள் விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.
Verse 70
வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க் கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்.
Verse 71
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன் விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே, கண்டு வணங்கும் களிறு.
Verse 72
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி, ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள் குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று.
Verse 73
குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை, சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை இளங்குமரர் கோமான் இடம்.
Verse 74
இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி, வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே, நாத்தன்னா லுள்ள நலம்.
Verse 75
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய், நிலமே புரண்டு போய் வீழ , - சலமேதான் வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான், தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.
Verse 76
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன் புனவேங்கை நாறும் பொருப்பு.
Verse 77
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால், அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
Verse 78
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட் கரண்.
Verse 79
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன், முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், - சரணாமேல் ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே, ஓதுகதி மாயனையே ஓர்த்து.
Verse 80
ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து, பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி, நிரையார மார்வனையே நின்று.
Verse 81
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய - வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே, நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
Verse 82
நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன் நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, ஓராது நிற்ப துணர்வு.
Verse 83
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக் கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, எங்கணைந்து காண்டும் இனி.
Verse 84
இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும், இனியவன் காண்பரிய னேலும், - இனியவன் கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தி னுள்ளே யுளன்.
Verse 85
உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத் துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே, கண்டா ருகப்பர் கவி.
Verse 86
கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய், செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய் ஏற்றுயிரை அட்டான் எழில்.
Verse 87
எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத் தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல, கார்வானம் காட்டும் கலந்து.
Verse 88
கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும் கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை, அந்திவான் காட்டும் அது.
Verse 89
அதுநன் றிதுதீதென் றையப் படாதே, மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள் முன்னங் கழலும் முடிந்து.
Verse 90
முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம் படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள் தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.
Verse 91
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள் எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ, வண்டுழாய் மாலளந்த மண்.
Verse 92
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான், வயிற்றினோ டாற்றா மகன்.
Verse 93
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன், மகனா மவன்மகன்றன் காதல் - மகனை சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே நிறைசெய்தென் நெஞ்சே நினை.
Verse 94
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால், அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை, உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.
Verse 95
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி, வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து, பொன்றாமை மாயன் புகுந்து,
Verse 96
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய் இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.
Verse 97
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன், அடித்தா மரையாம் அலர்.
Verse 98
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய, மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட் கெண்ணத்தா னாமோ இமை.
Verse 99
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும், அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான், துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
Verse 100
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான், அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் தாள்முதலே நங்கட்குச் சார்வு.
Verse 101
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், தேனமரும் பூமேல் திரு.