Verse 1
கைதைசேர் பூம்பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு வையத்து அடியவர்கள் வாழ அருந்தமிழ் நூற்றந்தாதிப் படிவிளங்கச் செய்தான் பரிந்து.
Verse 2
வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, இடராழி நீங்குகவே என்று.
Verse 3
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது, ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
Verse 4
பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த, நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன், நீயளவு கண்ட நெறி.
Verse 5
நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம் ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த, ஆலமமர் கண்டத் தரன்.
Verse 6
அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி, உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர் கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி, உருவமெரி கார்மேனி ஒன்று.
Verse 7
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான், இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை.
Verse 8
திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத் திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க் கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத வண்ணன் படைத்த மயக்கு.
Verse 9
மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத் தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள் தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே, போராழிக் கையால் பொருது?
Verse 10
பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன் ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க, மாவடிவின் நீயளந்த மண்?
Verse 11
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில் அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ் வுலகளவு முண்டோவுன் வாய்?
Verse 12
வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம் தாயவனை யல்லது தாந்தொழா - பேய்முலைநஞ் சூணாக வுண்டான் உருவோடு பேரல்லால் காணாகண் கேளா செவி.
Verse 13
செவிவாய் கண்மூக் குடலென் றைம்புலனும் செந்தீபுவிகால் நீர்வண் பூதமைந்தும் -அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே ஏனமாய் நின்றாற் கியல்வு.
Verse 14
இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல, முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக நீதியா லோதி நியமங்க ளால்பரவ, ஆதியாய் நின்றார் அவர்.
Verse 15
அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த மூர்த்தி யுருவே முதல்.
Verse 16
முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து, பல்லார் அருளும் பழுது.
Verse 17
பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன், கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண் அடலோத வண்ணர் அடி.
Verse 18
அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல, முடியும் விசும்பளந் ததென்பர், - வடியுகிரால் ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தா னுலகளந்த நான்று
Verse 19
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய் தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி, பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும், மருதிடைபோய் மண்ணளந்த மால்.
Verse 20
மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண் டாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும் திருமேனி நீதீண்டப் பெற்று.
Verse 21
பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய், செற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி, நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.
Verse 22
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால், சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும் படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம், அடையாழி நெஞ்சே அறி.
Verse 23
அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன், பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும் காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை, தாம்பேகொண் டார்த்த தழும்பு.
Verse 24
தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை, தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த, வீங்கோத வண்ணர் விரல்.
Verse 25
விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே? ஓங்கோத வண்ணா உரை.
Verse 26
உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப்போதும் வரைமேல் மரகதமே போல, - திரைமேல் கிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி இடந்தானை யேத்தி யெழும்.
Verse 27
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை, வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார், வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை.
Verse 28
மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து, சிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப் போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் காக்கோடு பற்றியான் கை.
Verse 29
கைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத் தைய மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த இறையான்நின் ஆகத் திறை.
Verse 30
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும், அறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின் பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த, செங்கண்மால் கண்டாய் தெளி.
Verse 31
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே, போய்நாடிக் கொள்ளும் புரிந்து.
Verse 32
புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி, அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ வண்ணத்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால்,மற் றெண்ணத்தா னாமோ இமை?
Verse 33
இமையாத கண்ணால் இருளகல நோக்கி, அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல், ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய் நாகத் தணையான் நகர்.
Verse 34
நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல் பகர மறைபயந்த பண்பன், - பெயரினையே புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும், அந்தியா லாம்பனங் கென்?
Verse 35
என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில் முன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் ஆய்த்தாய் முலைதந்த ஆறு?
Verse 36
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால், கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி, நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து முடியான் படைத்த முரண்?
Verse 37
முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம் தரணி தனதாகத் தானே - இரணியனைப் புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ மண்ணிரந்து கொண்ட வகை?
Verse 38
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள், நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம் ஊதியவாய் மாலுகந்த வூர்.
Verse 39
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை, பேர எறிந்த பெருமணியை, - காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர் என்னென்ற மால திடம்.
Verse 40
இடந்தது பூமி எடுத்தது குன்றம், கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும் நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே, பேரோத வண்ணர் பெரிது.
Verse 41
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர் கோன்வீழ கண்டுகந்தான் குன்று.
Verse 42
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும் இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும் புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித் திரு.
Verse 43
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல் பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த, மாலோத வண்ணர் மனம்?
Verse 44
மனமாசு தீரு மறுவி னையும் சார, தனமாய தானேகை கூடும், - புனமேய பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி, தாம்தொழா நிற்பார் தமர்.
Verse 45
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே, அவ்வண்ணம் அழியா னாம்.
Verse 46
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க, நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை, பாதமத்தா லேண்ணினான் பண்பு.
Verse 47
பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற, வெண்புரிநூல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம் போகத்தால் பூமியாள் வார்.
Verse 48
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள் கைந்நாகம் காத்தான் கழல்.
Verse 49
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல், சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும் செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல, மருவாழி நெஞ்சே மகிழ்.
Verse 50
மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை, நெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடி,எம் ஆதிகாண் பார்க்கு மரிது.
Verse 51
அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம் பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர் ஏற்றானைக் காண்ப தெளிது.
Verse 52
எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில் பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய் இருந்தான் திருநாமம் எண்.
Verse 53
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர், வண்ண மலரேந்தி வைகலும், - நண்ணி ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று.
Verse 54
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும் புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம், திருமாற் கரவு.
Verse 55
அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய் குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண் டட்டெடுத்த செங்கண் அவன்.
Verse 56
அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன் அவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால் ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல் பேராயற் காட்பட்டார் பேர்.
Verse 57
பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை, ஆரே அறிவார்? அதுநிற்க, - நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன் அடிக்கமலந் தன்னை அயன்.
Verse 58
அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி, உயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும், சொன்மாலை கற்றேன் தொழுது.
Verse 59
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி, எழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான், அந்தரமொன் றில்லை அடை.
Verse 60
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம், மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், - நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள் தன்விலங்கை வைத்தான் சரண்.
Verse 61
சரணா மறைபயந்த தாமரையா னோடு, மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், - அரணாய பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது, ஓராழி சூழ்ந்த வுலகு.
Verse 62
உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ் விலகு கருங்கடலும் வெற்பும், - உலகினில் செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன் புந்தியி லாய புணர்ப்பு.
Verse 63
புணர்மருதி னூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து, மணமருவ மால் விடையேழ் செற்று, - கணம்வெருவ ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும், சூழரவப் பொங்கணையான் தோள்.
Verse 64
தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும், கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், - நாநாளும் கோணா கணையான் கூரைகழலே கூறுவதே, நாணாமை நள்ளேன் நயம்.
Verse 65
நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு, உயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன் திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன், வருமாறென் நம்மேல் வினை?
Verse 66
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார், தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், - நினைதற் கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட் கரியானைக் கைதொழுதக் கால்.
Verse 67
காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த மேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண் ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும், பேராழி கொண்டான் பெயர்.
Verse 68
பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும் தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு.
Verse 69
உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி, உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீகிடந்த பால்?
Verse 70
பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், - ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.
Verse 71
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு, சொல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால், நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.
Verse 72
நன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி, நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,- என்றும் விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய், அடலாழி கொண்டான்மாட் டன்பு.
Verse 73
அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன் பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், - முன்பூழி காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும் பூணாரம் பூண்டான் புகழ்.
Verse 74
புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை, இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும், உடலும் உயிருமேற்றான்.
Verse 75
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு.
Verse 76
காப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள், ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச் சிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி.
Verse 77
வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும் வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த சீரான் திருவேங் கடம்.
Verse 78
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும் நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே, என்றால் கெடுமாம் இடர்.
Verse 79
இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.
Verse 80
கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார், மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில் ஆரங்கை தோய அடுத்து?
Verse 81
அடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி, படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை, வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு, அல்லாதும் ஆவரோ ஆள்?
Verse 82
ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று, வாளமர் வேண்டி வரைநட்டு, - நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை?
Verse 83
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந் தொடையலோ டேந்திய தூபம், - இடையிடையின் மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் மான்மாய எய்தான் வரை.
Verse 84
வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர் நிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல், பேராழி கொண்ட பிரான்?
Verse 85
பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?, உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத் தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை அடிக்களவு போந்த படி?
Verse 86
படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட் கொடிகண் டறிதியே? கூறாய், - வடிவில் பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி, நெறிநின்ற நெஞ்சமே நீ.
Verse 87
நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில் கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி யினி .
Verse 88
இனியார் புகுவா ரெழுநரக வாசல்? முனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக் கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு, நன்கறிந்த நாவலம்சூழ் நாடு.
Verse 89
நாடிலும் நின்னடியே நாடுவன், நாடோறும் பாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும் பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு, என்னாகி லென்னே எனக்கு?
Verse 90
எனக்கா வாரா ரொருவரே, எம்பெருமான் தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம் பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ, மாமேனி காட்டும் வரம்.
Verse 91
வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம், சிரத்தால் வணங்கானா மென்றே, - உரத்தினால் ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை, ஓரரியாய் நீயிடந்த தூன்?
Verse 92
ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி, ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், - ஏனத் துருவா யுலகிடந்த வூழியான் பாதம், மருவாதார்க் குண்டாமோ வான்.
Verse 93
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு.
Verse 94
வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால் பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின் சேவடிமே லீடழியச் செற்று.
Verse 95
செற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும், மற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால், இறையேனும் ஏத்தாதென் நா.
Verse 96
நாவாயி லுண்டே நமோநார ணா என்று, ஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர் தீக்கதிக்கட் செல்லும் திறம்.
Verse 97
திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய், அறம்பாவ மென்றிரண்டு மாவான், - புறந்தானிம் மண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே, கண்டாய் கடைக்கட் பிடி.
Verse 98
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன் அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.
Verse 99
பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும், நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும் இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன் ஒருவனங்கத் தென்று முளன்.
Verse 100
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய், வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும், உள்ளத்தி னுள்ளனென் றோர்.
Verse 101
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும், ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர், மாயவனை யேமனத்து வை.