Verse 1
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார், கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும், மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த, விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!
Verse 2
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.
Verse 3
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க் காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை, வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற, மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.
Verse 4
கேட்கயா னுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட, பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு, வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!
Verse 5
இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன் அரும்பெற லன்பு புக்கிட்டடிமைபூண் டுய்ந்து போனேன், வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து, கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய வாறே.
Verse 6
மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட, கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப் பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?
Verse 7
இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற, மெய்ம்மையை விரிந்த சோலை வியந்திரு வரங்கம் மேய, செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை, தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே.
Verse 8
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற, தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார், மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டி னாரே.
Verse 9
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையி னெரிநின் றுண்ணும் கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம், தெள்ளியீர் தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே.
Verse 10
சித்தமும் செவ்வை நில்லா தெஞ் சய்கேன் தீவி னையேன், பத்திமைக் கன்பு டையேன்ஆவதே பணியா யந்தாய், முத்தொளி மரத கம்மே முழங்கொளி முகில்வண் ணா,என் அத்த நின் னடிமை யல்லால் யாதுமொன் றறிகி லேனே.
Verse 11
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு கண்டு, தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய், அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான, பண்டமாம் பரம சோதி நின்னையே பரவு வேனே.
Verse 12
ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால், தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம், பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று காவிபோல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.
Verse 13
இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன் அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு, சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே.
Verse 14
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும் பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன், தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை, பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே.
Verse 15
முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து, அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு, என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும், அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே.
Verse 16
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம் தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க் கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும், தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே!
Verse 17
பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி, ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம், பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு, ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே.
Verse 18
இளைப்பினை யியக்கம் நீக்கி யிருந்துமுன் னிமையைக் கூட்டி, அளப்பிலைம் புலன டக்கி அன்பவர் கண்ணே வைத்து, துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்ம்மையே காண்கிற் பாரே!
Verse 19
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும், உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?
Verse 20
வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும், நாளும் தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை, மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும், ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வர் தாமே.